Tamilnadu

”காரம்தான் கொஞ்சம் தூக்கலா இருக்கு” - குறவர் இல்லத்தில் கறிக்குழம்பு, இட்லி உண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் குறவர் இன மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் கடனுதவி போன்றவற்றை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குறவர் இன சிறுவர்களுடன் கலந்துரையாடி செல்ஃபி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆவடி பகுதியில் அமைந்துள்ள குறவர் இன மக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

அப்போது, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்ணின் வீட்டில் காலை உணவாக கறிக்குழம்புடன் இட்லியும், வடையும் சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ருசியாக இருந்ததாகவும் காரம் சற்று தூக்கலாக இருந்ததாகவும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழாவின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 5,900க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களில் 2,084 புதிய கான்கிரீட் வீடுகளும் அவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், நரிக்குறவர், பழங்குடியினர், விளிம்புநிலை மக்களைத் தேடிச் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசாக திமுக அரசு உள்ளது எனவும் பேசியிருந்தார்.

Also Read: கல்வி.. வேலை வாய்ப்பு.. நெரிசலுக்கு தீர்வு : தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கிறார் முதல்வர்!