Tamilnadu

“உள்ள இருக்குற அரிசிய எடுங்க” : வடிவேலு பாணியில் கல்லாப்பெட்டியை குறிவைத்து திருடிய வாலிபர்!

நடிகர் வடிவேலு நடித்த திரைப்படக் காட்சி பாணியில், அரிசி வாங்குவது போல் நடித்து ரூ.22 ஆயிரத்தை ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் (60). இவர் அந்தப் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவரது கடைக்கு வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அவர் கணேசனிடம் எனக்கு அரிசி மூட்டை வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே கணேசன் அரிசி மூட்டையை எடுப்பதற்காக கடையின் வேறு ஒரு அறைக்குச் சென்றார்.

அப்போது அந்த வாலிபர் கடையின் எடை எந்திரத்தில் இருந்த ரூ.22 ஆயிரத்தை நைசாக திருடிக்கொண்டு, அங்கிருந்து உடனடியாகத் தப்பி சென்றுள்ளார்.

அரிசி மூட்டையை எடுத்து கொண்டு வெளியே வந்த கணேசன், யாரும் இல்லாததைக் கண்டு தேடியுள்ளார். பின்னர் கடையில் இருந்த ரூ.22 ஆயிரத்தை திருடிச் சென்றுவிட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, கணேசன் இச்சம்பவம் குறித்து சிவந்திபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில், அரிசிக் கடையில் அரிசி வாங்குவது போல் நடித்து அங்கிருக்கும், தராசு படிக்கல் என மொத்தத்தையும் திருடிச் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அதேபோல நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தந்தை வாங்கிய கடனுக்காக 15 வயது மகன் வெட்டிக் கொலை.. கந்துவட்டி கும்பலுக்கு ‘காப்பு’ மாட்டிய போலிஸ்!