Tamilnadu

போலிஸார் நடத்திய 'திடீர்’ ஆபரேஷன்.. 350 கிலோ குட்கா, ஹான்ஸ் பறிமுதல் - 6 ரவுடிகள் கைது!

திருவண்ணாமலை நகர்ப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளின் நடமாட்டம் அதிகரித்த நிலையில், போதை வஸ்துக்களால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியரிடம் காவல்துறை சார்பில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நபர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் சமூக விரோத செயல்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தன்னுடைய தொலைபேசி எண்ணை பொதுமக்களிடம் தெரிவித்து, 24 மணி நேரமும் தன்னை தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம். அப்படி தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று நள்ளிரவு நகர காவல் நிலையத்தில் போலிஸார் குவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாகாளீஸ்வரன் மற்றும் திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட போலிஸார் 8க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து, ஸ்ட்ராமிங் ஆப்ரேஷன் என்ற பெயரில் திருவண்ணாமலை நகர் பகுதி பே கோபுரம் அருகில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் வெற்றிவேல் என்கின்ற லொட்டா தினா (23), அருண்பாண்டியன் (25), பாலாஜி என்கின்ற பூனை பாலாஜி, ஐயப்பன் (31), காளிமுத்து (26) ஆகியோர் மற்றும் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்ற கிருஷ்ணமூர்த்தி (40) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இவர்களிடம் இருந்து ஒரு கத்தி இரண்டு கூர்மையான ஆயுதங்கள் 57 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் உரிய ஆவணங்கள் இல்லாமல் சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 22 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் செய்யாறு பகுதியில் தனிப்படை காவலர்கள் செய்யாறு நோக்கி வந்த பொலிரோ வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில் 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 350 கிலோ குட்கா ஹான்ஸ் பொருட்கள் மற்றும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப்பணம் ஒரு பொலிரோ வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா கீழ்விஷாரம் ‌ கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (22) அதே பகுதியைச் சேர்ந்த பரத் மோகன் (19) திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த ஷாதிக் (38) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 24 மணி நேரத்தில் போலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: “உங்க கணவரை கடத்திட்டோம்.. 2 லட்சம் கொடுங்க” : போனில் மிரட்டிய மர்ம கும்பல் - பொறிவைத்து பிடித்த போலிஸ்!