Tamilnadu

சுட சுட இருந்த குருமா பாத்திரத்தில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி.. தஞ்சை அருகே பரிதாபம்!

சுட சுட இருந்த குருமா பாத்திரத்திற்குள் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் திருவிடைமருதூர் பகுதியில் நடந்தேறியிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், அனுஷியா தம்பதி. இவர்களது இரண்டு வயது மகன்தான் ரிஷி.

முருகேசன் கோவை மாவட்டத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவியான அனுஷியா (28) ஐந்துதலைப்பு வாய்க்காலில் உள்ள வீட்டு வாயிலிலேயே பானிபூரி விற்கும் கடை நடத்தி வருகிறார்.

அந்த பானி பூரிக்கு தேவையான குருமாவையும் அவரே வீட்டில் வைத்து செய்து விற்பனை செய்து வருகிறார். இப்படி இருக்கையில் கடந்த மார்ச் 27ம் தேதியன்று மாலை குருமாவை தயார் செய்து அந்த பாத்திரத்தை அனுஷியா இறக்கி வைத்திருக்கிறார்.

அப்போது இதனை அறிந்திராத அந்த குழந்தை ரிஷி தவறுதலாக கொதிக்க கொதிக்க இறக்கி வைக்கப்பட்ட குருமா பாத்திரத்தில் விழுந்திருக்கிறான்.

இதனால் பலத்த காயமுற்ற குழந்தை ரிஷியை மீட்ட அனுஷியா முதலில் அம்மாசமுத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்.

அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி குழந்தை ரிஷி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த திருவிடமருதூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இரண்டே வயதான குழந்தை ரிஷி உயிரிழந்த சம்பவம் தாய் தந்தையர் மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: ஃபோன் பாத்தது குத்தமா? -டெல்லியில் சாலையில் இருந்த போலிஸை குத்தி தூக்கி வீசிவிட்டு நடுரோட்டில் நின்ற காளை