Tamilnadu

“ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...” : சென்னை போலிஸ் கமிஷனர் அதிரடி எச்சரிக்கை!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக ஒன்றிய அரசுக்கு எதிராக இன்று தேசிய அளவிலான வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

வேலைநிறுத்தம் காரணமாக அரசுப் பேருந்துகள் மிக சொற்ப அளவிலேயே இயக்கப்படுகின்றன. ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்கள் இந்தச் சூழலை பயன்படுத்திக்கொண்டு வாடிக்கையாளர்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

அதிக கட்டணம் வசூலித்ததாக பயணிகள் அளித்த புகாரின்கீழ் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் பயணிக்க அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் மீறினால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து, ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்போர் குறித்து காவல் அவசர எண்கள் 100, 103ல் புகார் அளிக்கலாம் என்றும் 90031 30103 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களை காவல்துறையினர் நேரில் சந்தித்து அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read: குடும்ப வறுமையால் நேர்ந்த அவலம்.. விடா முயற்சியால் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற ‘ஆட்டோ ஓட்டுநர்’ !