Tamilnadu

“மெடிக்கல் மற்றும் ஜவுளி கடையில் ஆன்லைனில் லாட்டரி விற்பனை.. 2 பேர் கைது”: துப்பு துலங்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரில் மருந்து கடை நடத்தி வருபவர் மெடிக்கல் செந்தில் ராஜா (38), அதேபகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் சுந்தரேசன் (32). இவர்கள் இருவரும் மறைமுகமாக ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பல்லடம் போலிஸாக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலிஸாக்கு சந்தேகம் ஏற்படாதவாறு செந்தில் ராஜா என்பவர் தனது மருந்து கடையிலும், சுந்தரேசன் அவர் தனது ஜவுளி கடையிலும் மருந்து மற்றும் ஜவுளி துணிகளை வாங்க வருவது போல் லாட்டரி சீட்டு வாடிக்கையாளர்களை தங்களது கடைக்கு வரவழைத்து, செல்போன்களில் வாட்ஸ்அப் குழுக்களை ஏற்படுத்தி, ஏழை எளிய நடுத்தர பனியன் தொழிலாளர்களை ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தில் அடிமையாக்கி, தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டி வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து பல்லடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், கார்த்திகேயன் மற்றும் போலிஸார் நேற்று மாலை மகாலட்சுமி நகரிலுள்ள மெடிக்கல் மற்றும் ஜவுளிக்கடையில் அதிரடியாக நுழைந்து அங்கிருந்த மெடிக்கல் செந்தில் ராஜா மற்றும் ஜவுளி சுந்தரேசன் ஆகிய இருவரிடமிருந்தும் 2 செல்போன்கள் மற்றும் ரூ.4,300 ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் பல்லடம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து போலிஸார் கூறுகையில் மெடிக்கல் செந்தில் ராஜா மற்றும் ஜவுளி சுந்தரேசன் ஆகிய இருவரும் பல வருடங்களாக, ஆன்லைன் லாட்டரி சூதாட்டம் நடத்திவந்ததாகவும் இதில் சம்பாதித்த பணத்தை கொண்டு வட்டிக்கு விட்டும், சிட் பண்டு நடத்தியும் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதும் தெரியவந்துள்ளதாகவும் இது குறித்தும் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலிஸார் தெரிவித்தனர்.

Also Read: புகைப்பட கலைக்கான ஆஸ்கர் விருது.. WPPh சர்வதேச விருதைப் பெறும் முதல் தமிழர் : யார் இந்த செந்தில் குமரன்?