Tamilnadu

தமிழ்நாட்டின் முதல் ‘திருநங்கை’ ஊராட்சி செயலராக தாட்சாயணி நியமனம்- இப்படியும் சமூக நீதி காக்கும் தி.மு.க!

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கோடுவள்ளி ஊராட்சியில் ஊராட்சி செயலர் பணி வேண்டும் என திருநங்கை தாட்சாயணி என்பவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனை அடுத்து திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பணி ஆணை வழங்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையில் கிராம ஊராட்சி செயலராக தாட்சாயிணி நியமிக்கப்பட்டதற்கான பணி ஆணையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோருடைய குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 2 குழந்தைகளுக்கு தலா 3 லட்சம் என 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின்போது கோடுவள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா குமார், உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், திருநங்கை தாட்சாயணியின் உறவினர்கள் என பலர் இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கை தாட்சாயணி, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பல முறை பணி கேட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதும் தனது மனுவை பரிசீலனை செய்து பணி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் என அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும், இதுபோல திருநங்கைகளுக்கு தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறைகளில் பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டார்.

Also Read: சமூக வலைதளங்களில் அவதூறு.. மீரா மிதுனுக்கு ஏப்.,6 வரை ஜெயில் - உத்தரவு பிறப்பித்த நீதிபதி!