Tamilnadu

பங்குதாரருக்கு தெரியாமல் ₹.79 லட்சம் கையாடல்.. மேனேஜரை தட்டி தூக்கிய போலிஸ் : கொள்ளை நடந்தது எப்படி ?

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் வையாபுரிக்கவுண்டனூரில் ஒரு பால் நிறுவனம் இயங்கிவருகிறது. இதன் பங்குதாரராக அதே ஊரைச் சேர்ந்த சுந்தரராஜ் (53) உள்ளார். இந்த நிறுவனத்தில் வெள்ளியணை அருகே உள்ள செல்லாண்டிபட்டி கருவாட்டியூரைச் சேர்ந்த சதீஸ்குமார் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

இதே நிறுவனத்தில் கோபால் என்பவர் சூப்பர்வைசராகவும், சந்திரலேகா என்பவர் கம்ப்பூட்டர் ஆபரேட்டராகவும், சுரேஷ் என்பவர் தரம் பிரிப்பாளராகவும், மருதமுத்து என்பவர் பால் அளவீடு செய்பவராகவும், கந்தசாமி என்பவர் பால் கொள்முதல் செய்பவராகவும் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் பால் நிறுவனத்தின் பங்குதாரர் சுந்தரராஜ் கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப்புகாரில், சதீஸ்குமார், கோபால், சந்திரலேகா, சுரேஷ், மருதமுத்து, கந்தசாமி ஆகியோர் கூட்டாக சேர்ந்து மோசடி செய்வதாகவும், பாலின் தரம், பாலின் அளவு ஆகியவற்றைக் கூடுதலாக பால் உற்பத்தியாளர்கள் கணக்கில் காண்பித்து பணத்தை அபகரிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் கடந்த கடந்த 4 வருடங்களாக நிறுவனத்தை ஏமாற்றி சுமார் ரூ 79 லட்சத்து 92 ஆயிரத்து 359 கையாடல் செய்துள்ளதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

இதனையடுத்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் பால் நிறுவனத்தின் மேலாளர் சதீஸ்குமார் கைதுசெய்து காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் கோபால், சந்திரலேகா, சுரேஷ், மருதமுத்து, கந்தசாமி ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தனிப்படை போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: உரிமையாளர் மீது தீரா பாசம்.. தகராறை தடுக்க வந்த வளர்ப்பு நாய் அடித்துக் கொலை.. போலிஸ் வழக்குப்பதிவு!