Tamilnadu

செல்போன் ஆப் மூலம் போதை மாத்திரைகளை சப்ளை செய்த கல்லூரி மாணவர் - ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிய சென்னை போலிஸ்!

சென்னை மாநகரில் போதைப்பொருள் போதை மாத்திரைகளை கட்டுப்படுத்த காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருந்தார். வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுந்தரவதனம் வடசென்னையில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். அவரது தனிப்படையினருக்கு கல்லூரி மாணவர் ஒருவர் மூலம் ரகசியமாக வசதி படைத்தவர்களுக்கும், கல்லூரி மாணவர்கள் நடிகர்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் உயர்ரக கஞ்சா சப்ளை செய்யும் நபர் பற்றிய ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து துணை ஆணையர் சுந்தரவதனம் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் காதர் செல்வகுமார், மனுவேல், ராஜவேல், சரவண குமார், அசோக்குமார், காசி, சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கல்லூரி மாணவர் ஒருவர் உதவியுடன் அதிநவீன போதை மருந்து சப்ளை செய்யும் வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து போதைப் பொருட்கள் விற்பனையை கண்டுபிடித்தனர்.

தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜீவா வயது 24 என்பவர் அந்த குரூப்-ஐ நடத்தி வந்துள்ளார். இவர் கூடுவாஞ்சேரி அருகில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் அங்கு படிக்கும் காலத்தில் இவருக்கு போதைப் பொருள் உபயோகிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இதனால் இவரது பெற்றோர் இவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். அதன்பின் டெல்லி சென்ற அவர் அங்கு பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இதன் மூலம் ரகசியமாக உயர்ரக போதை மாத்திரைகள் மற்றும் உயர்ரக கஞ்சா விற்கும் நண்பர்களோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இவர் இதன் மூலம் தனியாக ஒரு ஆப் ஏற்படுத்தி அதில் கஞ்சா போதை மாத்திரைகள் கேட்பவர்களுக்கு கொரியர் மூலம் அனுப்பியுள்ளார். இதனால் போலிஸாரால் இவரை கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழலில், ரகசிய தகவல் மூலம் தற்போது ஜீவா போலிஸாரிடம் சிக்கியுள்ளார். இவரிடமிருந்து ஏராளமான போதை மாத்திரைகளும் உயர்ரக கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: கல்லூரி மட்டுமல்ல; ITI பாலிடெக்னிக் சேரும் மாணவிகளுக்கும் உதவித்தொகை: அதிரடி திட்டத்தை வெளியிட்ட அமைச்சர்