Tamilnadu

சிக்குகிறார் எடப்பாடி பழனிசாமி.. குடும்பத்தினருக்காக முறைகேடு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ள நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்திற்கு மட்டும் அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்த அனுமதித்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், ஊழல் தடுப்பு போலிஸார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த செல்வம் என்பவர் தொடர்ந்திருந்த மனுவில், விவசாயத்திற்காக ஆற்றிலிருந்து மேடான பகுதிகளுக்கு தண்ணீரை எடுப்பதற்காக தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் தமிழகத்தில் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டதாகவும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும், அவரது குடும்பத்தினரும் உறுப்பினர்களாக உள்ள சேலம் மாவட்டம் நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்துக்கு மட்டும், 5 குதிரைத்திறன் கொண்ட மோட்டார்களை, கூடுதலாக 15 குதிரைத் திறனாக மாற்ற அனுமதி அளித்து, நீர்வள ஆதாரத்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த உத்தரவை அதிகார துஷ்பிரயோகச் செயல் என்றும், நடத்தை விதிகளை மீறிய முறைகேடு என்று மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்காமல், அவர்களை பெயர்களை நீக்கி, புதிதாக தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் பெயரில் எடப்பாடி இணைப்பு வாங்கியுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஊழல் தடுப்பு போலிஸாருக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். எனவே ஊழல் தடுப்புத்துறை வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Also Read: “பகல் வேஷம் போட்டு அரசியலில் ‘காற்றுப்போன பலூன்’ ஆகிடாதீங்க” : எடப்பாடிக்கு வேளாண் அமைச்சர் பதிலடி!