Tamilnadu

போலி முத்திரைத்தாள் மூலம் மூதாட்டியிடம் நில மோசடி.. அதிமுக நிர்வாகி மீது CBCID விசாரணை - பின்னணி என்ன?

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள நல்லியம்பாளைத்தைச் சேர்ந்தவர்கள் அர்ஜுனன், பாப்பாத்தி, சரஸ்வதி. இவர்களுக்கு சொந்தமான 24 ஏக்கர் நிலத்தை கடந்த 2007ஆம் ஆண்டு தொழிலதிபர் ரவிச்செல்வன் என்பவர் ரூ.20 போலி முத்திரைத்தாள் மூலம் அர்ஜுனன் மட்டும் கிரய ஒப்பந்தம் செய்து கொடுத்ததாகக் கூறி, பதிவு செய்யப்படாத ஒரு போலியான கிரய ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளார்.

இதனையடுத்து, அ.தி.மு.க பிரமுகரான ரவிச்செல்வன் கடந்த 2011 - 2016ஆம் ஆண்டு வரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்த காலத்தில் முழு சொத்தையும் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாப்பாத்தி கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், 10 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் மூதாட்டியான பாப்பாத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் கடந்த மார்ச் 10ஆம் தேதி அர்ஜுனன், பாப்பாத்தி, சரஸ்வதி ஆகியோரிடமிருந்து 24 ஏக்கர் நிலத்தை மோசடி முத்திரைத்தாள் மூலம் ரவிச் செல்வன் அபகரிக்க முயன்றது குறித்து சிபிசிஐடி விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. விசாரணையை 12 வாரத்தில் முடித்து அறிக்கையை தாக்கல் செய்யவும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து மூதாட்டி பாப்பாத்தி இன்று கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் தனக்கு சொந்தமான நிலத்தை அ.தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த ரவிச்சந்திரன் அபகரிக்க முயன்தாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அவர் மீதான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி நடத்த உள்ள நிலையில், தனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோடந்தூர் கிராம அ.தி.மு.க ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான ரவிச்சந்திரன் ஊராட்சியில் நிதி முறைகேடுகள் ஊழல்கள், மோசடிகள், அரசு நில அபகரிப்பு, தீண்டாமை கம்பி வேலி அமைத்து ஆக்கிரமிப்பு, மின்சார திருட்டு, அமராவதி ஆற்றில் வட்ட கிணறு அமைத்து திருட்டு, துப்பாக்கி முனையில் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தாலிக்கு தங்கம் வழங்குவதில் இருந்த குறைகள்.. ‘பக்கா பிளான்’ போட்டு திட்டத்தையே மாற்றியமைத்த அமைச்சர் PTR!