Tamilnadu

சட்டத்தை மீறி பைக் சாகசம் செய்த இளைஞர்கள்.. சாட்டையை சுழற்றிய போலிஸார் - பின்னணி என்ன?

சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி பைக் ரேசில் ஈடுபட்ட இரண்டு இளஞ்சிறார் மற்றும் கல்லூரி மாணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் கடந்த மார்ச் 18ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவாறு இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபடும் வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பைக் ரேஸில் ஈடுபட்டது கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஐவர் என தெரிய வந்தது.

பின்னர், முகமது ரஹ்மதுல்லா வயது 20, புதுக் கல்லூரி மாணவர் முகமது சாதிக் (20) ஆஷிக், மற்றும் 2 சிறார்கள் உட்பட மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அடையாறு போக்குவரத்து புலனாய்வு உதவி ஆணையர் ஜவகர் பீட்டர் தலைமையிலான போலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்களையும் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Also Read: தொழிலதிபரிடம் ரூ.97 லட்சம் மோசடி.. பாஜக MP சுரேஷ் கோபியின் சகோதரரை அதிரடியாக கைது செய்த தமிழக போலிஸ்!