Tamilnadu

மயிலுக்கு பயந்து வீட்டுக்குள் புகுந்த சாரைப்பாம்பு; நாகூர் அருகே அலறியடித்து ஓடிய குடியிருப்பு வாசிகள்!

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே வடக்கு பால்பண்ணைசேரியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது வீட்டின் அருகே தனியாருக்கு சொந்தமான மூங்கில் தோட்டம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான நல்லபாம்பு மற்றும் சாரைப் பாம்புகள் உள்ளது.

இந்த பகுதியில் அவ்வப்போது மயில்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் பாம்புகள் அங்கிருந்து தப்பி குடியிருப்பு பகுதிகளில் தஞ்சமடைய தொடங்கியுள்ளது.

கடந்த 11 மாதங்களில் இப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை தீயணைப்பு துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று மயிலுக்கு பயந்து குடியிருப்பு பகுதியில் சுமார் 10 அடி நீளமுள்ள சாரை பாம்பு தஞ்சமடைந்தது.

இதனைக்கண்ட பாஸ்கரனின் மனைவி வசந்தி அலறியடித்து வெளியே வந்து கூச்சலிட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பாம்பு பிடிக்கும் நவீன கருவி மூலம் 10 அடி நீள சாரை பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப் பையில் அடைத்து பின்னர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

தொடர்ந்து பாம்புகளின் அச்சுறுத்தல் அதிகம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் தனியாருக்கு சொந்தமான மூங்கில்களை வெட்ட உத்தரவிட்டு தங்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: குட்டிகளுடன் காட்டு யானை.. காவலாக நிற்கும் 9 யானைகள் - தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!