Tamilnadu
25 லட்சம் விதைகள்.. கண்டுபிடிப்பாளருக்கு விருது : பனைத் தொழிலுக்கு முக்கியத்துவம் - சிறப்பு அம்சங்கள் ?
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இரண்டாவதுமுறையாக முழு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணி முதல் தாக்கல் செய்து பேசினார்.
முன்னதாக, கடந்த வேளாண் பட்ஜெட்டில், பனை மேம்பாட்டு இயக்கம் 3 கோடி ரூபாய் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதுமட்டுமல்லாது, தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும், வளத்தோடும், ஒன்றுபட்டு, மழை ஈர்ப்பு மையம், நீர் நிலைகளின் காவலன் என்றும் அழைக்கப்படும் பனை மரத்தினை, வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்தும் செயலினைத் தடுக்க அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் நடப்பு வேளாண் பட்ஜெட்டில். பனை மரத்தின் தொழி மேம்பாட்டுக்கு பல்வேறு சிறப்புத்திட்டங்களை அறிவித்திருந்தார். அதன்விபரம் பின்வருமாறு.
பனை மேம்பாட்டு இயக்கம் - பனை மதிப்பு கூட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம்!
பராமரிப்பின்றியும் பலன் தருபவை பனை மரங்கள். பனைமரம் விதையிட்ட நாளைத் தவிர மற்ற எந்த நாளும் கவனிக்காமல் விட்டுவிட்டாலும் தானாய் வளர்ந்து பயன்தரும் என்று நாலடியார் குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம் தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் இயைந்துள்ளது என்பதற்கு சங்க இலக்கியங்களே சான்றாகும். தமிழ் மொழியின் ஆரம்பகால ஊடகமாக பனை ஓலைகள் செயல்பட்டன.
தமிழ்நாட்டில் ஐந்து கோடி பனை மரங்கள் உள்ளன. சுமார் மூன்று லட்சம் குடும்பங்கள் பனை இலைகள், நார் ஆகியவற்றைக் கொண்டு கூடை பின்னுதல், பாய், கயிறு திரித்தல் போன்ற தொழில்களை சார்ந்தும், 11 ஆயிரம் பனைத் தொழிலாளர்கள் நுங்கு அறுவடை, பதநீர் இறக்குதல் மூலம் பனை மரங்களை வாழ்வாதாரமாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், கடந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இவ்வரசினால் பனை மேம்பாட்டு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்கள் சென்ற ஆண்டில், தனது சொந்த முயற்சியினால், ஒரு இலட்சம் பனை விதைகளை இலவசமாக இத்திட்ட செயல்பாட்டிற்கு வழங்கினார்கள்.
எதிர்வரும் 2022-23 ஆம் ஆண்டிலும், இவ்வரசு 10 இலட்சம் பனை விதைகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும். பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க, பனை மரம் ஏறும் இயந்திரங்கள், பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், உபகரணங்கள் ஆகியவை 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
பனைவெல்லம் தயாரிக்கும் பயிற்சியும் அதற்கான உபகரணங்களும் 250 பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும். இது தவிர, 100 பெண்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு, பனை ஓலைப் பொருட்கள் தயாரிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். இவர்களுக்கு மூலப் பொருட்களை வழங்கி, உற்பத்தி செய்யப்படும் பனை ஓலைப் பொருட்கள் மாநில, மாவட்ட சங்கங்களினால் உருப்படி கூலி முறையில் வாங்கப்பட்டு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இத்திட்டம், இரண்டு கோடியே 65 இலட்சம் ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும். சிறந்த பனையேறும் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு விருதும் வழங்கப்படும்.
மேலும், 2022-23 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் 25 இலட்சம் பனை விதைகள் நடப்படும்.
Also Read
-
“இஸ்லாமியர்களின் உரிமைக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க. தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!