Tamilnadu

பஞ்சர் போட நின்ற லாரி மீது கார் மோதி விபத்து; ஒருவர் பலி; மூவர் படுகாயம் - கோவில்பட்டி அருகே சோகம்!

நெல்லையில் உள்ள சுண்ணாம்பு பவுடர் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து சுண்ணாம்பு பவுடர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஆந்திர மாநிலத்திற்கு சென்று உள்ளது. லாரியை விழுப்புரம் மாவட்டம் வலத்தியை சேர்ந்த ஜெயபால் ஓட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்தபோது லாரியின் டயர் பஞ்சர் ஆனதால் ஜெயபால் லாரியை ஓரமாக நிறுத்தி உள்ளார்.

இந்நிலையில் நெல்லையில் இருந்து மதுரை சென்ற கார் ஒன்று, பழுதாகி நின்ற லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் காரில் வந்த நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் காரில் வந்த பாளையங்கோட்டையை சேர்ந்த முருகன், சுரேஷ் , குருமூர்த்தி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் நாலாட்டின் புதூர் போலிஸார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த மோகன்தாஸ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “வரி செலுத்தலனா இனி இதான் நிலைமை” : கடைகள் முன்பு குப்பையைக் கொட்டி அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!