Tamilnadu

ஊரடங்கில் உதித்த உதிரிபாக கார்; வியந்து பார்க்கும் நீலகிரி மக்கள்; அசத்தும் ஊட்டி இளைஞன்!

தற்காலத்து சிறுவர்கள், இளைஞர்கள் பலருக்கும் தொழில்நுட்பங்கள் மீதான ஆர்வம் அதிகரித்த வண்ணமே உள்ளது.

அதிலும் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் அதிகபடியான இளம் தொழில்நுட்பக் கலைஞர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியுலகுக்கு தெரிய வருகின்றனர்.

அந்த வகையில் உதகையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஊரடங்கு காலத்தின் போது உருவாக்கிய சிறிய ரக கார் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை நகர் பகுதியை சேர்ந்தவர் ரோஷன். 17 வயது இளைஞரான ரோஷன் என்பவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே சைக்கிள் உதிரி பாகங்களை கொண்டு பல்வேறு பொருட்களை தயாரிப்பது, வாகனங்களை இயக்குவதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

ஈரோட்டில் படித்து வரும் இவர் கொரோனா ஊரடங்கின் போது ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்று நினைத்த ரோஷன் பழமையான கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் உதிரிபாகங்களை சேகரித்து வைத்து கொண்டு, சிறிய ரக வடிவிலான கார் ஒன்றை உருவாக்க விரும்பினார்.

அதன்படி 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒன்பது மாத கால முயற்சியில் பெட்ரோலில் இயங்கும் சிறிய ரக கார் ஒன்றை தற்போது தயாரித்துள்ளார். இருவர் அமர்ந்து பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த காரில் தற்போது ரோஷன் உதகை நகரில் வலம் வருகிறார். இந்த சாதனை இளைஞரின் முயற்சியை உதகை நகர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Also Read: காணாமல் போன வாய்பேச முடியாத சிறுவன்.. 6 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஆதார்’ உதவியுடன் மீட்பு : நடந்தது என்ன?