Tamilnadu

’கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தற்கொலை என நாடகம்’ : மனைவி கொலை வழக்கில் உண்மையை கக்கிய கணவன்!

27 வயதுடைய யாஸ்மின் என்பவர் சென்னை மண்ணடியில் கணவர் அப்துல்ரகுமான் மற்றும் ஒரு மகன், ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.

கடந்த மார்ச் 10ம் தேதியன்று, யாஸ்மின் மதியம் அவரது வீட்டில் தூங்கியவர் மாலை 7 மணியாகியும் எழுந்திருக்கவில்லை. சுயநினைவு இல்லாமல் இருந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டிருக்கிறது.

அப்போது ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவக் குழுவினர் யாஸ்மினை பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து தனது மகள் யாஸ்மினின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.

புகாரின் பேரின் சந்தேக மரணம் பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். அதன்படி யாஸ்மினின் பிரேத பரிசோதனை அறிக்கையைக் கொண்டு அவரது கணவர் அப்துல்ரகுமானிடம் விசாரித்துள்ளனர்.

அதில் யாஸ்மினுக்கும், அப்துல் ரகுமானுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும், சம்பவத்தன்று மதியம் இருவருக்குமிடையே மீண்டும் சண்டை ஏற்பட்ட பிறகு யாஸ்மின் தூங்கச் சென்றிருக்கிறார்.

அப்போது யாஸ்மினின் கழுத்தை நெரித்து தலையணையால் முகத்தை அமுக்கியும் கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல இருந்துவிட்டு, தூக்க மாத்திரை சாப்பிட்டு யாஸ்மின் மயங்கியதாக நடித்ததோடு, அக்கம்பக்கத்தினரை அழைத்து அவர்களது உதவியை நாடியதாக அப்துல் ரகுமான் விசாரணையில் தெரிவித்திக்கிறார்.

இதனையடுத்து, சந்தேக மரணம் பிரிவுக்கு பதிவு செய்த வழக்கை கொலைப்பிரிவுக்கு மாற்றிய போலிஸார் அப்துல் ரகுமானை (32) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read: சாலையில் நடந்துச் சென்ற பெண் கூட்டு பாலியல் துன்புறுத்தல்.. பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் நடந்த அவலம்! (Video)