Tamilnadu

ஸ்கேன் எடுக்கும் பெண்களே உஷார்: சென்னை அரசு மருத்துவமனையில் பரபரப்பை கிளப்பிய கில்லாடிபெண்; நடந்தது என்ன?

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்த விமால (38) என்ற பெண் சிகிச்சைக்காக அண்மையில் சென்றிருக்கிறார்.

அங்கு, மருத்துவர்கள் அவரை சி.டி.ஸ்கேன் எடுக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதனையடுத்து ஸ்கேன் எடுக்கச் செல்லும் முன் வெளியே காத்திருந்த விமலாவிடம், பெண் ஒருவர் ‘ஸ்கேன் எடுக்கும் போது நகைகள் ஏதும் அணிந்திருக்கக் கூடாது. உள்ளே போகும் முன் என்னிடம் கொடுங்கள். நான் போகும் போது என்னுடைய நகையை உங்களிடம் கொடுக்கிறேன்’ என அக்கறையாக பேசியிருக்கிறார்.

அவரது பேச்சை நம்பிய விமலா தன்னுடைய நகைகளை கழட்டி கொடுத்துவிட்டு ஸ்கேன் எடுக்கச் சென்றிருக்கிறார். வெளியே வந்த போது நகைகளை கொடுத்த அந்த பெண் இல்லாததால் அதிர்ச்சியடைந்த விமலா மருத்துவமனையில் உள்ள போலிஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் நகைகளை எடுத்துச் சென்றது கீழ்ப்பாக்கம் ஓசான் குளத்தைச் சேர்ந்த சாந்தி (53) என தெரிய வந்திருக்கிறது.

தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளை குறி வைத்து நகைகளை திருடிச் செல்வதையே வாடிக்கையாக வைத்திருப்பதும், சாந்தி மீது பல காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்திருக்கிறது.

பின்னர் சாந்தியிடம் இருந்து ஐந்து சவரன் நகையை பறிமுதல் செய்த போலிஸார் அவரை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Also Read: “இதுக்கு மாட்டு வண்டியே தேவலாம்”.. சொகுசு பேருந்தால் நொந்துபோன பயணிகள் - நடுவழியில் நடந்த அவலம் !