Tamilnadu

”சாப்பிட அழைத்ததை கணவன் கண்டுக்காததால் ஆத்திரம்” - தீக்குளித்த மனைவி; சென்னை அருகே பயங்கரம்!

கணவன் மனைவி இடையேயான சண்டையில் ஏற்படும் பரிதாபகரமான, கோரமான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இப்படி இருக்கையில், சமைத்து வைத்த உணவை சாப்பிடுவதற்கு அழைத்த போது கணவன் செவிமடுக்காததால் மனைவி தீக்குளித்த சம்பவம் சென்னையில் நடந்திருக்கிறது.

சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி மேகலா. இந்த தம்பதிக்கு பூர்ணிமாதேவி என்ற மகளும், நவீன்ராஜ் என்ற மகனும் இருக்கிறார்கள்.

தேவராஜுக்கும், மேகலாவுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது. அந்த வகையில் நேற்று, வழக்கம் போல வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிடுவதற்காக தேவராஜை மேகலா அழைத்திருக்கிறார்.

ஆனால் அதனை தேவராஜ் பொருட்படுத்தாமல் இருந்ததால் கடுமையாக கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார் மேகலா. இதனையடுத்து வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை தன் உடல் மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார்.

இதனால் அலறிய மேகலாவை கண்டதும் அவரை காப்பாற்ற முயன்ற தேவராஜுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள்.

Also Read: பெண் போலிஸார் முன் சட்டையைக் கழற்றி சேட்டை.. வாலிபருக்கு தக்கபாடம் புகட்டிய நீதிமன்றம்!