Tamilnadu

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை?.. 9 பேர் கைது: மதுரை மேலூரில் நடந்தது என்ன?

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகூர் ஹனிபா (28). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடத்தி சென்றதாக கூறி அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுமி வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதை கண்ட பெற்றோர் சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மேலும் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் அவரது பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையில் சிறுமியைக் கடத்தியது தொடர்பாக போலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், நாகூர் ஹனிபாவும் சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த 14ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மதுரையில் வீடு எடுத்துத் தங்கியுள்ளனர்.

இருவீட்டாரும் இவர்களைத் தேடியதாலும், சிறுமி மேஜர் இல்லை என்பதால் மீண்டும் இருவரும் வீட்டிற்கே வந்துள்ளனர். இதனால் இருவரும் எலி மருந்து உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து நாகூர் ஹனிபாவுக்கு உதவியதாக அவரது தாயார், நண்பர் உள்ளிட்ட 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

Also Read: “150 CCTVல் ஆய்வு.. சிறையிலிருந்து வந்தவுடனே மூதாட்டியிடம் கைவரிசை” : பிரபல கொள்ளையன் சிக்கியது எப்படி?