Tamilnadu
1967 மார்ச் 6 - தி.மு.க முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றி, பேரறிஞர் அண்ணா முதல்வராக பதவியேற்ற நாள் !
காஞ்சிபுரத்தில் உள்ள ஒலி முகமது பேட்டையில் நெசவுக்குடும்பத்தில் பிறந்தவர் பேரறிஞர் அண்ணா. குடும்ப ஏழ்மைக் காரணமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக சிறிது காலம் பணியாற்றி பின்னர், பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ., எம்.ஏ., என இரண்டு பட்டங்களை பெற்று ஆங்கிலத்தில் புலமையடைந்தார்.
கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியராக பணியை தொடங்கிய பேரறிஞர் அண்ணாவை, தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கைகள் கவர்ந்தன. தந்தை பெரியாருடன் இணைந்தார். ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழுக்காக சிறை சென்றார் பேரறிஞர் அண்ணா.
பின்னாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்து, 1962 ஆம் ஆண்டு, மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா, நாடாளுமன்றத்தில் தென்னகத்தின் உரிமையை நிலைநாட்ட எழுச்சியுரைகளை ஆற்றினார். அவரின் பேச்சைக் கேட்டு வடநாட்டு உறுப்பினர்கள் வாயடைத்து போயினர். பேரறிஞரின் வாதத்திறனை கண்டு பண்டித நேரு உட்பட நாட்டின் முக்கிய தலைவர்கள் வியந்தனர்.
பின்னர் 1965 ஆம் ஆண்டு மீண்டும் இந்தி திணிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கடும் போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபட்டது. தமிழர் நலனே குறிக்கோளாக கொண்ட தி.மு.கழகத்தினர் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதை கண்டு தமிழ்நாட்டோர் கொதித்தனர். மேலும், இந்தி திணிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை தமிழ்நாட்டு மக்களைப் பாதித்தது.
இதன் விளைவு 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக ஆனார்கள்.
6-3-1967-ல், இந்தியப் பொதுத்தேர்தல் ஜனநாயக வரலாற்றில், முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த அரிய சாதனையைப் படைத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகவும், தலைவர் கலைஞர் உள்ளிட்டோர் அமைச்சர்களாகவும், தமிழில் பதவியேற்பு நிகழ்வினை நடத்தி, உளமார உறுதிமொழி கூறிப் பொறுப்பேற்ற நாள் இன்று.
பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியில், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது, புரோகிதர்கள் இல்லாமல் நடக்கும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சிக்கன நடவடிக்கையாக அமைச்சர்களின் ஊதியம் பாதியாக குறைக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் உள்ள தமது எளிமையான வீட்டிலேயே வாழ்ந்தார் பேரறிஞர் அண்ணா.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?