Tamilnadu

நிலத்தகராறில் பெண் அடித்துக் கொலை.. அ.தி.மு.க பிரமுகருக்கு போலிஸ் வலைவீச்சு - பின்னணி என்ன?

நிலத்தகராறில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை போலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், தலைவாசல் தென்குமரையைச் சேர்ந்தவர் ராமசாமி (49). அவரது அக்கா பூவாயி (66). இவர்களுக்கு, அதே ஊரில் 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. கடன் அதிகளவில் இருந்ததால், நிலத்தை விற்க முடிவு செய்தனர்.

அதே ஊரைச் சேர்ந்த, அ.தி.மு.கவைச் சேர்ந்த ஊராட்சி முன்னாள் தலைவர் வெங்கடாசலத்தின் உறவினரான வெங்கடேசனுக்கு விற்க விலைபேசி 21 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்றுள்ளனர்.

ஆறு மாதத்துக்கு மேலாகியும் மீதி பணத்தைக் கொடுக்காததால், வேறொருவரிடம், அதே நிலத்தை விற்பதற்காக ஒப்பந்தம் செய்து, 21 லட்சம் ரூபாய் பெற்று, அத்தொகையை வெங்கடாசலத்திடம் கொடுத்தபோது அவற்றை வாங்க மறுத்துள்ளார்.

நேற்று முன்தினம், வெங்கடாசலம் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட அடியாட்களுடன் ராமசாமிக்கு சொந்தமான விவசாய நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். பின்னர் பொக்லைன் மற்றும் டிராக்டர் கொண்டு பயிர்களை அழித்து நிலத்தை கையகப்படுத்த முயன்றுள்ளனர்.

விவசாய நிலத்தில், பொக்லைன், டிராக்டர்களுடன் சென்று மக்காச்சோள பயிரை சேதப்படுத்தியது குறித்து ராமசாமி தலைவாசல் போலிஸில் புகார் அளித்தார்.

இதனால், அன்றிரவு வீட்டில் இருந்த பூவாயி மீது உருட்டுக்கட்டை, இரும்புக் கம்பியால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பூவாயியை, ஆத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து, ராமசாமி போலிஸில் புகார் அளித்தார். அதன்பேரில் அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் வெங்கடாசலம், அவரது மகன் தியாகராஜன், அவருடன் வந்தவர்கள் என 8 பேர் மீது, கொலை உள்பட ஏழு பிரிவுகளில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Also Read: கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட சண்டை.. பள்ளி மாணவர் அடித்துக் கொலை: தெலங்கானாவில் அதிர்ச்சி!