Tamilnadu

பட்டா கத்தியுடன் பைக்கில் சுற்றித்திரிந்த நபர்; சுத்துபோட்ட போலிஸ்; சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு!

சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலை வழியாக வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது காவல் ஆணையரகம் 3வது நுழைவு வாயில் வழியாக சென்ற போது வாலிபர் இருசக்கர வாகனத்தில் வைத்து சென்ற டிபன் பாக்ஸ் திடீரென கீழே விழுந்தது.

உடனே அந்த வாலிபர் பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கி ரோட்டில் விழுந்த டிபன் பாக்ஸை எடுக்க முயன்றார். அப்போது அவரது இடுப்பில் பட்டா கத்தி ஒன்றை மறைத்து வைத்திருந்ததை பார்த்த காவலர்கள் உடனே அவரை பிடிக்க முயச்சித்தனர். ஆனால் அந்த வாலிபர் போலிஸாரை கண்டதும் பைக்கில் தப்பி செல்ல முயன்றார்.

Also Read: காதலியிடம் பேசிய இளைஞருக்கு கத்திக்குத்து.. நண்பர்களுடன் சேர்ந்து காதலன் வெறிச்செயல் - பகீர் சம்பவம் !

இருப்பினும் போலிஸார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து காவல் ஆணையரகம் அலுவலத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் பெரம்பூர் பேரக்ஸ் சாலை கே.எம் கார்டன் பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) என்பதும் கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்தது.

மேலும் பிடிபட்ட கார்த்திக் எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்ட கார்த்திக் போலிஸாரின் விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததுடன் தான் கொண்டு வந்த கத்தி கீழே கிடந்தது என்றும், அதை வேறொருவரிடம் கொடுக்க சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பாதுகாப்பு காவலர்கள் அந்த வாலிபரிடம் இருந்த கத்தி, 2 செல்போன், தனியார் நிறுவன அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட கார்த்திக்கை காவலர்கள் வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வேப்பேரி போலிஸார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “டூத் பேஸ்ட்-க்கு பதிலாக எலி மருந்தை வைத்து பல் துலக்கிய கல்லூரி மாணவி” : தூக்கத்தில் நடந்த விபரீதம் !