Tamilnadu

"போலிஸ் SI என ஐடி கார்டு காட்டி அடாவடி செய்துவந்த பெண்” : ரூ.21 லட்சம் மோசடி - விசாரணையில் ‘பகீர்’ தகவல்!

வேலூரில் கடந்த 2 மாதங்களாக தங்கி காவல்துறை உதவி ஆய்வாளர் என போலி அடையாள அட்டையைக் காட்டி பண மோசடிகளில் ஈடுபட்டு வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வேலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி முதல் சென்னை மாநகர குற்றப்பிரிவில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் எனக் கூறி ரோஹினி (34) என்பவர் தங்கி வந்துள்ளார்.

அவர் தங்கியிருந்த அறைக்கான வாடகை மட்டும் சுமார் 20 ஆயிரம் ரூபாயை கடந்துவிட்ட நிலையில் விடுதி ஊழியர் ஒருவர் ரோஹினியிடம் சென்று எப்போது அறையை காலி செய்வீர்கள் எனக் கேட்டுள்ளார்.

அதற்கு ரோஹினி, அந்த ஊழியரை ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளார். இந்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனுக்கு கிடைத்துள்ளது. அதன்பேரில், தனிப்படை காவலர்கள் அங்கு சென்று விசாரித்தபோது, அவர் சென்னை உதவி ஆய்வாளர் இல்லை என்றும் போலியான அடையாள அட்டையை கொடுத்து அங்கு தங்கி இருப்பதும் தெரியவந்தது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன அவர் திருவள்ளூர் மாவட்டம் பூங்காவனம் நகரைச் சேர்ந்தவர் என்பதும் ஆய்வாளர் எனப் பொய் சொல்லி மோசடி செய்து வந்ததும் உறுதியானது.

சென்னையைச் சேர்ந்த ரோஹிணி தான் காவல் உதவி ஆய்வாளர் என்றும் குறைந்த விலையில் சொகுசு கார் வாங்கித் தருவதாகவும் கூறி ஆற்காட்டை சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரூ.21 லட்சம் உள்பட பலரிடம் மோசடி செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also Read: “மானிட்டர் தான் இல்ல.. cctv கேமரா இருக்கு” : நகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட இளம்பெண் - நடந்தது என்ன?