Tamilnadu

”காதலி பிரிந்து சென்றதால் விரக்தி; தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவன்” - புழல் அருகே பரிதாபம்!

சென்னையை அடுத்த புழலில் புத்தகரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். அவரது மகன் சதீஷ்குமார் (வயது 20). இவர் கோயம்பேடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரானிக் மீடியா மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.

இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். திடீரென அப்பெண் தனது காதலை கைவிடும் படி கூறியதால் மனமுடைந்து பெற்றோர்களிடம் பேசாமல் மனவிரக்தியில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள அறையில் தூங்க செல்வதாக கூறிச்சென்றார். வெகுநேரமாகியும் வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த தம்பி சந்தோஷ் கதவை தட்டி திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஃபேன் மாட்டும் ஊக்கில் நைலான் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது பற்றி புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புழல் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “Miss You அம்மா, அப்பா.. உங்களை ரொம்ப நேசிக்கிறேன்” : இணையத்தில் வைரலாகும் உக்ரைன் ராணுவ வீரரின் வீடியோ!