Tamilnadu

“மைக்கேல்பட்டி.. ஹிஜாப் சர்ச்சை..” : பா.ஜ.க-வின் சேட்டைகளுக்கு தமிழக மக்கள் கொடுத்த பதிலடி!

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றுகிறது. அதேபோல், 119 நகராட்சிகளையும், 320 பேரூராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளையில் அ.தி.மு.க கூட்டணி மற்றும் தனியாக போட்டியிட்ட பா.ஜ.க படுதோல்வியைச் சந்தித்து வருகிறது. இதில், ஒருபடி மேலே சென்று தமிழகத்தில் மதவெறி அரசியலையும், பிரிவினைவாத அரசியலையும் முன்னெடுக்கும் பா.ஜ.கவிற்கு இந்தத் தேர்தலில் சம்மட்டி அடி விழுந்துள்ளது.

குறிப்பாக மதுரை மேலூரில் இஸ்லாமிய பெண்களிடம் ஹிஜாப்பைக் கழற்றச் சொல்லி பா.ஜ.க வாக்குச்சாவடி முகவர் ரகளையில் ஈடுபட்ட வார்டில் பா.ஜ.க வேட்பாளர் டெபாசிட் இழந்துள்ளார்.

அதேபோல் தமிழ்நாடில் அரியலூர் மாணவி மரணத்தை மதத்தை வைத்து அரசியல் செய்த பா.ஜ.க, மாணவியின் மரணத்திற்கு மதமாற்ற காரணம் இருப்பதாகவும் புகார் கூறியது.

இதனிடையே, மைக்கேல்பட்டி இடம்பெற்றுள்ள திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் பா.ஜ.க வெற்றிபெறும் என பா.ஜ.க கும்பல் கூறி வந்த நிலையில், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் தி.மு.க மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் 11 இடங்களில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துத்வா கருத்தியலை தமிழ்நாட்டில் புகுத்த நினைத்து ரகளையிலும், சேட்டைகளிலும் ஈடுபட்ட பா.ஜ.க கும்பலுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

Also Read: பாஜகவின் மதவெறி அரசியலுக்கு சம்மட்டி அடி.. ‘மைக்கேல்பட்டி’ அமைந்துள்ள பேரூராட்சியில் தி.மு.க அமோக வெற்றி!