Tamilnadu

ரூ.4 கோடி வாடகை பாக்கி; மயிலாப்பூர் கிளப் பூட்டி சீல் வைப்பு; அறநிலையத்துறை அமைச்சர் அதிரடி!

மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான, மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலையில் உள்ள 42 கிரவுண்ட் 1566 சதுரஅடி பரப்பளவுள்ள மனை மயிலாப்பூர் கிளப் நிறுவனத்திற்கு 99 வருட நீண்ட கால குத்தகைக்கு விடப்பட்டு 27.8.2000 அன்று குத்தகை காலம் முடிவடைந்தது.

அந்த இடத்தினை மீண்டும் குத்தகைக்கு விடுவது தொடர்பாக மயிலாப்பூர் கிளப் நிறுவனம் கோரியதையடுத்து, தமிழ் வளர்ச்சி, அறநிலையம் மற்றும் செய்தித்துறை 2007-ல் 42 கிரவுண்ட் 1566 சதுரஅடியில் ஒரு பகுதியான 18 கிரவுண்ட் 2364 சதுரஅடி நிலத்தை திருக்கோயில் வசம் ஒப்படைத்தனர்

அரசாணையின்படி மயிலாப்பூர் கிளப் நிறுவனத்தார் 18 கிரவுண்ட் 2364 சதுரஅடி பரப்பளவுக்கு பதிலாக 2007ஆம் ஆண்டு 18 கிரவுண்ட் 1581 சதுர அடி நிலத்தை ஒப்படைத்தனர். தற்போது மயிலாப்பூர் கிளப் நிறுவனத்தார் வசம் 23 கிரவுண்ட் 2,385 சதுரஅடி பரப்பளவுள்ள மனை உள்ளது. மயிலாப்பூர் கிளப் நிறுவனத்திற்கு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவிகிதம் வாடகை உயர்வு செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டது.

மேலும் இந்து சமய அறநிலைய சட்ட விதிகளின்படி இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான கட்டிடங்கள் மற்றும் மனைகளின் வாடகைதாரர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நியாய வாடகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

அரசாணை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் 2016 அன்று வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் நியாய வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. மாதம் ஒன்றுக்கு நியாய வாடகை ரூ.11,51,700/- நிர்ணயம் செய்யப்பட்ட விவரம் மற்றும் நிலுவைகளை செலுத்திட கோரி அறிவிப்பு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து மேற்படி நிறுவனம் புதிதாக நிர்ணயம் செய்த வாடகையை செலுத்தாததால் கடந்த 22.12.2021 மற்றும் 6.1.2022 இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை எதிர்த்து மயிலாப்பூர் கிளப் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரீட் மனு 03.02.2022 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து 5.2.2022 மயிலாப்பூர் கிளப் நிறுவனத்தார் நியாய வாடகை நிலுவைத் தொகையில் ஒரு பகுதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை திருக்கோயிலின் தக்கார் மற்றும் இணை ஆணையர் செயல் அலுவலரிடம் வழங்கினர். எனினும் 31.01.2022 வரை வாடகை நிலுவையாக ரூ.4.07,86,731/ உள்ளதால் அதிக வாடகை நிலுவை வைத்துள்ளதால் இன்று சீல் வைக்கப்பட்டது.

Also Read: அடுத்தடுத்து மீட்கப்படும் கோயில் நிலங்கள்; முனைப்புடன் செயல்படும் திமுக அரசு - இந்து தமிழ்திசை பாராட்டு!