Tamilnadu

தேர்வு நடக்கும்போது மாணவிக்கு பாலியல் சீண்டல்.. போக்சோ சட்டத்தில் ஆசிரியரை சிறையில் தள்ளிய போலிஸார்!

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் பகுதியில் ஹாஜியார் முகமது யூசுப் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவரிடம் தேர்வு நடக்கும்போது, அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் முருகேசன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த மாணவி உடனடியாக உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கூறியுள்ளார். இதனால் உறவினர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சக ஆசிரியர்கள் ஆங்கில ஆசிரியர் முருகேசனை பூட்டி வைத்து பாதுகாத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த இனாம்குளத்தூர் காவல் நிலைய போலிஸார் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் துணை ஆய்வாளர் அங்கு வந்து மாணவி மற்றும் மாணவி தோழிகளிடம் விசாரணை மேற்கொண்டபோது ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் ஸ்ரீரங்கம் தாசில்தார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் முருகேசனை பொதுமக்களிடம் இருந்து மீட்டு ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: ‘கிராவல் மணல்’ கடத்தல்.. OPS உதவியாளர் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு: கூண்டோடு சிக்கிய அதிமுக கும்பல்?