Tamilnadu

பஸ் ஸ்டாண்டில் நண்பனை குத்திக்கொன்ற இளைஞர்.. 'பகீர்' காரணம் : 15 நிமிடத்தில் கொலையாளியை பிடித்த போலிஸ்!

நீலகிரி மாவட்டம் உதகையில் நண்பனை குத்திக்கொன்ற கொலையாளியை 15 நிமிடத்தில் விரட்டிப் பிடித்த போலிஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை மஞ்சனக்கொரை பகுதியில் வசித்து வருபவர்கள் ஹரி மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இருவரும் ஒரே இடத்திற்கு வேலைக்கு சென்று வரும் நிலையில் இன்று 12 மணியளவில் ஹரி மற்றும் கார்த்தி ஆகியோர் பேருந்திலிருந்து இறங்கி விளையாடி உள்ளனர்.

அப்போது பொதுமக்கள் கண்ணெதிரே கார்த்தியை ஹரி சினிமா பாணியில் சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த கார்த்தி சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் பொதுமக்கள் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பி1 காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உடனடியாக கொலை செய்த ஹரி என்பவரை 15 நிமிடத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கடந்த ஆறு மாத காலமாக ஹரி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து கருங்குரங்கு ஒன்றை பிடித்து, அதை வீட்டிற்கு கொண்டுவந்து பொதுமக்கள் கண் முன்பு கத்தியால் வெட்டியுள்ளார்.

பின்னர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று தனது நண்பனை கத்தியால் குத்திய சம்பவம் உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை நடந்து 15 நிமிடத்தில் குற்றவாளியை கைது செய்த போலிஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also Read: கணவனை மிரட்ட விளையாட்டாக விஷம் குடித்த கர்ப்பிணிக்கு ஏற்பட்ட கதி... சோகத்தில் குடும்பம் : நடந்தது என்ன?