Tamilnadu
ரூ.2,390 கோடி வாடகை பாக்கி வசூல் - அறநிலையத்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு!
இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிலங்களிலிருந்து வர வேண்டிய ரூ.2,390 கோடி வாடகை பாக்கியை வசூலிக்க அறநிலையத்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், இடங்கள், கட்ட்டடங்கள் ஆகியவற்றின் வாடகை பல ஆண்டுகளாக வசூலிக்கப்படவில்லை என வெங்கட்ராமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஆண்டு அக்டோபர் வரை தமிழக அறநிலையத்துறை கோயில் நிலங்களிலிருந்து வர வேண்டிய வாடகை பாக்கி ரூ.2,390 கோடியை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறநிலையத்துறையிடம் கேள்வி எழுப்பினர். முறையாக வசூலித்திருந்தால் 100 கோயில்களை நன்றாக பராமரித்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
காணொலி மூலம் ஆஜராகியிருந்த ஆணையர், ஒரு வருடத்திற்கு 540 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாளொன்றுக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் வாடகை வசூலில் காவல்துறை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து கோவில்களின் சொத்துகளும் தொகுக்கப்பட்டு, வாடகைதாரர்களின் பட்டியலும், வாடகை செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் அவை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதற்கிடையே, கோவில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அறங்காவலர்களை தேர்ந்து எடுப்பதற்கான குழுவை அமைப்பதற்கான அனைத்து மாவட்டங்களிலும் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த 4 வாரங்களில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்தார்.
Also Read
-
திருச்செங்கோடு மக்களுக்கு அடித்த ஜாக்பாட்... மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை... புதிய வசதிகள் என்ன ?
-
100 இடங்களில் வாக்காளராக இருந்த பெண்... ஹரியானா தேர்தலில் குளறுபடிகளை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி !
-
மார்ச் மாதத்தில் கேரளா வருகிறது மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி... உறுதி செய்து வந்த E-Mail !
-
பழனிசாமிக்கே தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மீது சந்தேகம் இருக்கிறது - அம்பலப்படுத்திய முரசொலி !
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!