Tamilnadu

அறுவை சிகிச்சையின்போது “கற்பூர பொம்மை ஒன்று..” பாடிய சீதாலட்சுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மருத்துவமனை!

அறுவை சிகிச்சையின்போது இசைஞானி இளையராஜாவின் பாடலை பாடிய சீதாலட்சுமியை இளையராஜாவுடன் சந்திக்கச் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

சென்னைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. நல்ல குரல்வளம் கொண்ட பாடகரான இவர் சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.

அவரை பரிசோதித்தபோது, புற்றுநோய் கட்டி நுரையீரல் உட்பட பல பகுதிகளில் பரவி இருந்தது தெரிந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என அவரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சையின்போது, சீதாலட்சுமி "கற்பூர பொம்மை ஒன்று" பாடலை முணுமுணுக்கத் துவங்கினார். இதேபோல் அவர் இளையராஜா இசையமைத்த பல பாடல்களைப் பாடினார். இதை பார்த்து மருத்துவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவருக்கு இளையராஜா இந்தளவுக்கு விருப்பமானவரா என மருத்துவக் குழுவினர் ஆச்சரியமடிந்து அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், “நிச்சயமாக. அவரை யாருக்குத்தான் பிடிக்காது! அவர் ஒரு லெஜெண்ட்.” எனப் பதிலளித்துள்ளார்.

முதல் முறையாக அறுவை சிகிச்சையின்போது நோயாளி ஒருவர் பாட்டுப்பாடிய சம்பவம் நடந்துள்ளது என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். அறுவை சிகிச்சையின்போது சீதாலட்சுமி பாடல் பாடும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இளையராஜாவின் தீவிர ரசிகையான சீதாலட்சுமியை இசைஞானி இளையராஜாவுடன் சந்திக்கச் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “எங்கள் தகவல் தொடர்பு குழுவிமர் மருத்துவரைத் தொடர்புகொண்டு, “சிகிச்சை பெற்று வரும் சீதாலட்சுமி, இளையராஜாவின் தீவிர ரசிகர் என்று கேள்விப்பட்டோம்.

எனவே, அவரை நேரில் சந்திக்க இளையராஜாவின் அப்பாயின்ட்மென்ட் பெற முயற்சிக்கிறோம். இது அவருக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு அவர் விரைவாக குணமடைய உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனத் தெரிவித்தனர்.

பின்னர் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சீதாலட்சுமியுடன் இளையராஜா சாரின் இல்லத்திற்கு குழுவினர் சென்றடைந்தனர். அவரைச் சந்திப்பதில் சீதாலட்சுமி மிகவும் ஆவலாக இருந்தார். நாம் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம் நடந்தது!

இளையாராஜாவை சந்தித்தார் அவரது ரசிகையான சீதாலட்சுமி. அவரது கதைகளைப் பகிர்ந்து கொண்டார், எங்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். மேலும் சீதாலட்சுமியை மகிழ்ச்சியாக உணர வைத்தார். இது நம்மால் மறக்க முடியாத அனுபவம்!” எனக் குறிப்பிட்டுள்ளது.

Also Read: அறுவை சிகிச்சையின் போது "முத்தே என் முத்தாரமே" பாடல் பாடிய பெண்: நெகிழ்ச்சியடைந்த மருத்துவர்கள்!