Tamilnadu

நீட் தேர்வுக்கு எதிரான அனைத்து கட்சி கூட்டத்தில் கட்சி சார்பாக கலந்துகொண்ட பிரதிநிதிகளின் பட்டியல் இதோ..!

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்து, ஆளுநர் அச்சட்டமுன்வடிவினைத் திருப்பி அனுப்பி வைத்துள்ள நிலையில், இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் சார்பில் கலந்துகொண்டோர்:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கு.செல்வப்பெருந்தகை

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எஸ்.பி.வெங்கடேஸ்வரன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.இராமச்சந்திரன்

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் வீ.பி. நாகை மாலி

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் டாக்டர்.ரகுராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எம்.சிந்தனைச்செல்வன்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் E.R.ஈஸ்வரன்

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி.வேல்முருகன்

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று, தொடக்க உரை ஆற்றினார். பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு விலக்கு தொடர்பான வரைவுத் தீர்மானத்தினை முன்மொழிந்தார்.

இதையடுத்து, கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, நீட் தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பை நல்குவதாகத் தெரிவித்தனர்.

நீட் தேர்விலிருந்து விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற, ஆளுநர் மூலம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதென தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Also Read: NEET - அனைத்து கட்சி கூட்டம் : ஒன்றிய அரசுக்கு பயம் காட்டும் முதலமைச்சர் உரையின் முக்கிய அம்சங்கள்!