Tamilnadu

உள்ளாட்சி தேர்தல் பணிகள் விறுவிறு: 6 ஆண்டுகளுக்கு பின் புதுப்பொலிவு பெறும் சென்னை மாநகராட்சி மன்றக்கூடம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நகர்ப்புற தேர்தலில் அதிக வார்டுகளையும், அதிக வாக்காளர்களையும் கொண்ட மாநகராட்சியாக இருக்கக்கூடிய சென்னை மாநகரும் தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறது.

சென்னை மாநகராட்சியின் தலைமையகமாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ரிப்பன் மாளிகை செயல்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள 200 வார்டுகளில் பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மற்றும் கவுன்சிலர்களால் தேர்வாக உள்ள மேயர் ஆகியோரின் கூட்டம் ரிப்பன் மாளிகை இரண்டாவது தளத்தில் உள்ள மன்றக் கூட்ட அரங்கில் நடை பெறுவது வழக்கம்.

ஆறு ஆண்டுகளாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் தேர்தல் நடத்தபடாமலேயே இருந்ததால் இந்த மன்றக் கூட்ட அரங்கம் பூட்டி இருந்தது.

இந்த நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடைபெறுவதால் ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள மன்ற கூட்ட அரங்கை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கூட்டம் அரங்கின் பழமை மாறாமல் அங்குள்ள இருக்கைகளை சரி செய்தும் தேவையான இடங்களுக்கு வர்ணம் பூசும் பணியும் நடைபெற்று வருகிறது.

மேயர் இருக்கை கவுன்சிலர் அமரக்கூடிய இடம், வளாகம் முழுவதும் புதுப் பொலிவுடன் தயாராகி வரும் நிலையில் மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4-ஆம் தேதி நடைபெற இருப்பதால் அதற்கு முன்னதாக பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Also Read: மக்கள் நலமன்றம் பெயரில் உணவு சேவை: நெகிழ்ச்சியடைய வைக்கும் நடிகர் கார்த்தி ரசிகர்களின் செயல் !