Tamilnadu

"தேர்தல் ஆணையத்தை நாங்கள் நடத்த முடியாது” : அ.தி.மு.கவுக்கு குட்டு வைத்த சென்னை ஐகோர்ட்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தபால் வாக்குகளுக்கு முழுவதுமாக விலக்கு அளிக்க வேண்டும் என்ற அதிமுக வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி 138 நகராட்சி 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கடந்த 26ஆம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவும், 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக மாநில தேர்தல் ஆணையம் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுமார் 80 ஆயிரம் காவல்துறை பணியாளர்களும், ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசுப் பணியாளர்களும் தேர்தல் அலுவலர்களாக நியமிப்பட உள்ளனர்.

பெரும்பாலும் தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும்போது அவர்களுக்கு தபால் வாக்கு உரிமை வழங்கப்படும். அதன் அடிப்படையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் வாக்குகளை தேர்தல் நாட்களுக்கு முன்பாகவே செலுத்திவிடுவார்கள்.

இந்நிலையில், தபால் வாக்கு என்ற முறையை இந்த தேர்தலில் முழுவதுமாக விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி அ.தி.மு.க சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.எம்.பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில அவசர ரிட் மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம்தான், தேர்தல் பணியில் எந்த அலுவலர் ஈடுபட வேண்டும் என்பதை முடிவு செய்யும், நீதிமன்றம் அதில் தலையிட முடியாது. தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் நடத்த முடியாது எனத் தெரிவித்து அ.தி.மு.க தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: போலி கையெழுத்து போட்டு முறைகேடு.. புகார் கொடுத்த அரசு ஊழியருக்கு கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க நிர்வாகி!