Tamilnadu

2 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி.. கத்தாரில் இருந்து வந்தவர் சென்னையில் கைது!

கேரள மாநில போலிஸாரால் 2 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி, கத்தார் நாட்டிலிருந்து விமானத்தில் வந்தபோது சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடித்து கைது செய்தனா்.

கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் 142 பயணிகள் வந்தனர். அந்தப் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரபீயூக் (37) என்ற பயணியின் பாஸ்போா்ட்டை அதிகாரிகள் கம்யூட்டரில் பரிசோதித்தனர். அதில், ரபீயூக் 2 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஹோஸ்ட்ரக் காவல் நிலையத்தில் ரபீயூக் மீது கடந்த 2020ஆம் ஆண்டில் அத்துமீறி வீடு புகுந்து தாக்கி, பொருட்களை சேதப்படுத்தியது, அதோடு ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. போலிஸ் கைதிலிருந்து தப்புவதற்காக ரபீயூக் வெளிநாட்டிற்கு தப்பியோடி தலைமறைவாகி விட்டார் என்று தெரியவந்தது.

இதையடு காசா்கோடு மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு, ரபீயூக்கை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சா்வதேச விமானநிலையங்களுக்கும் LOC போட்டு வைத்திருக்கிறாா் என்பது தெரியவந்தது.

உடனடியாக குடியுரிமை அதிகாரிகள், ரபீயூக்கை வெளியில் விடாமல், குடியுரிமை அலுவலக அறையில் அடைத்து வைத்தனர். அதோடு கேரள மாநில போலிஸாருக்கும், 2 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி,கத்தாா் நாட்டிலிருந்து விமானத்தில் திரும்பி வந்தபோது,சென்னை விமானநிலையத்தில் சிக்கிய தகவலை தெரிவித்தனா்.

இதையடுத்து கேரளா மாநில தனிப்படை போலிஸார் ரபீயூக்கை கைது செய்து கேரளா அழைத்து செல்ல சென்னை விமானநிலையத்திற்கு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Also Read: ”நான் ஒரு IAS; என்கிட்டயே தகராறு பண்றாங்க” - புகாரளிக்க வந்த போலி அதிகாரி கைது - மதுரவாயல் போலிஸ் அதிரடி!