Tamilnadu

கிறிஸ்துவ பெண்களிடம் தரக்குறைவாக பேசிய ஆர்எஸ்எஸ் நிர்வாகிக்கு காப்பு; மேலும் 20 பேர் மீது வழக்குப்பதிவு!

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் சமாதானபுரதில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் கன்னியாஸ்திரியாக இருக்கும் ராணி, தேவசாந்தி ஆகிய இருவரும் திம்மயம்பட்டியில் கர்ப்பிணி பெண்ணிற்கு ஜெபம் செய்வதற்காக சென்றிருக்கிறார்கள்.

இதைக்கண்ட புதுக்கோட்டை மாவட்ட ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் கணேஷ்பாபு (38) தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 20க்கும் மேற்பட்டோர் அந்த இரண்டு கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு இந்துக்களை மதம் மாற்றம் செய்ய முயற்சிக்கிறீர்களா என்று கேட்டதோடு அவர்களை தகாத வார்த்தைகள் சொல்லி திட்டியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டும் அவர்கள் உபயோகித்த செல்பேசியை பிடுங்கி கொண்டும் அவர்களை திட்டி விரட்டி உள்ளனர்.

இதனையடுத்து கால்நடையாக இலுப்பூர் வந்தவர்கள் கிறிஸ்தவ சபையில் நடந்த நிகழ்வு குறித்து விளக்கியுள்ளனர். உடனே தேவாலய நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து இலுப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து நேற்று இரவு போலிஸார் கணேஷ் பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: கணவர் வருவதற்குள் 2ம் காதலனுடன் சேர்ந்து முதல் காதலன் கதையை முடித்த பெண் - சேத்தியாத்தோப்பில் பயங்கரம்!