Tamilnadu

ஒரே பள்ளியில் பயின்ற 6 பேருக்கு எம்.பி.பி.எஸ் சீட்.. நெல்லை அரசு பள்ளி மாணவிகள் அசத்தல் !

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் 4,349 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 2,650 இடங்கள் என, இளநிலை மருத்துவப் படிப்பில் (MBBS) மொத்தம் 6,999 இடங்கள் உள்ளன. அவற்றில் மாணவர்களை சேர்க்க தரவரசைப்பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில் நெல்லை மாநகராட்சி கல்லணை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த ஆறு மாணவிகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயில்வதற்கான இடம் கிடைத்துள்ளது.

நெல்லை டவுன் கல்லணை பள்ளியைச் சேர்ந்த ஞானலசி, இசக்கியம்மாள், நட்சத்திர பிரியா, ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், காயத்ரி என்ற மாணவி தூத்துக்குடி அரசு மருத்துக் கல்லூரியிலும் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது.

அதேபோல சௌந்தர்யா என்ற மாணவிக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியிலும், கிருத்திகா என்ற மாணவிக்கு கோவை தனியார் கல்லூரியிலும், எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான இடம் முதல்கட்ட கலந்தாய்வில் கிடைத்துள்ளது. மாநகராட்சி பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது. நெல்லை மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான கலந்தாய்வின் முதல் நாளிலேயே ஒரே அரசு பள்ளியை சேர்ந்த 6 மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதேபோல இன்று நடைபெறும் கலந்தாய்வு வரும் இதே பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும், பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 6 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் படித்து மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு பெற்ற நிலையில், முதல் நாள் கலந்தாய்வில் ஒரே பள்ளியில் 6 முதல் 12 வரை பயின்ற 6 மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் கலந்தாய்வில் இடம் கிடைத்ததுள்ளது குறிப்பிடதக்கது.

Also Read: நீட் தேர்வில் வெற்றி... அரசுப் பள்ளி மாணவருக்கு சீட்டை விட்டுக்கொடுத்த 61 வயது ஓய்வு பெற்ற ஆசிரியர்!