Tamilnadu

ஆர்டர் செய்து சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

பிரபல உணவகத்தில் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (22). இவர் பி.எஸ்.சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு கேமராமேனாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை பெரம்பூரில் உள்ள தனது நண்பரான கிரிதரன் என்பவரது மருந்துக் கடைக்குச் சென்றுள்ளார்.

அங்கு நண்பர்கள் நால்வர் சேர்ந்து பிரபல சிக்கன் ரெஸ்டாரண்டில் சிக்கன் ஆர்டர் செய்துள்ளனர். பின்பு கடையில் அமர்ந்து அனைவரும் சிக்கன் சாப்பிட்டுள்ளனர். பின்னர் அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

ரஞ்சித் இரவு 10 மணியளவில் இடது பக்கம் முதுகு வலிப்பதாகக் கூறியுள்ளார், இதனையடுத்து வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரது அண்ணன் அவரை அழைத்துக்கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ரஞ்சித் திடீரென்று மயக்கம் அடைந்துள்ளார். மருத்துவமனையில் ரஞ்சித்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி போலிஸார், ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல தனியார் உணவகத்தில் ஆர்டர் செய்து சிக்கன் சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே இளைஞர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பசியால் சாலையில் தவித்த முதியவர் - தக்க நேரத்தில் உயிரைக் காப்பாற்றிய டிராஃபிக் போலிஸார்!