Tamilnadu

அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. விசாரணை வளையத்தில் கே.பி.அன்பழகன்!

அ.தி.மு.க ஆட்சியின் போது இருந்த அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்களைக் குவித்துள்ளதாகப் புகார்கள் எழுந்தது. அப்போதே எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க அமைச்சர்களின் முறைகேடுகள் குறித்து அப்போதைய ஆளுநரிடம் புகார் அளித்தார்.

மேலும், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் சொத்துக் குவிப்பு புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படம் என தெரிவித்திருந்தார். இதையடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆயோரது வீடுகளில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புதுறையின்ர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அ.தி.மு.க ஆட்சியின் போது உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி. அன்பழகனுக்குத் தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வருமானத்தைவிடக் கூடுதலாக ரூ.11.32 கோடி சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன் சந்திரமோகன், மருமகன் வைஷ்ணவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வேலுமணி, விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் வீட்டில் சோதனை: கைது நடவடிக்கைக்குத் தயாராகும் லஞ்ச ஒழிப்புத்துறை?