Tamilnadu

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி: போலி சிறை அதிகாரியை நிஜ சிறையில் அடைத்த போலிஸார்!

வேலூர் மாவட்டம், மேல்மொனவூர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம், 20 பேர் கொண்ட மகளிர் குழுவை உருவாக்கி, ரூ. 85 ஆயிரம் கொடுத்தால் வங்கியில் லோன் வாங்கி தருவதாகக் கூறியுள்ளார்.

மேலும் உதவி ஆட்சியர் தொலைபேசி எண் எனக் கூறி ஒரு எண்ணை அவர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள் போன் செய்தபோது உதவி ஆட்சியர் போல் உதயகுமாரே போனில் பேசி ஏமாற்றியுள்ளார்.

இதை அறிந்த அந்தப் பெண் காவல்நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்தார். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து உதயகுமாரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் ரூ. 8 லட்சம் வேரை மோசடி செய்துள்ளதை அறிந்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், உதயகுமார் வேலூர் மத்திய சிறையில் அதிகாரியாக பணியாற்றுவது போல் போலியாக அடையாள அட்டை தயார் செய்துள்ளார்.

இந்த அட்டையைப் பயன்படுத்தித்தான் உதயகுமார் மோசடி செய்து வந்துள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.21 ஆயிரம் மற்றும் போலி அடையாள அட்டையை போலிஸார் பறிமுதல் செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

Also Read: ”ஃபாரினில் வேலை செய்வோரின் இளம் மனைவிகளே குறி” - பொரி வைத்து மோசடி; கேரளா கும்பல் சிக்கியது எப்படி?