Tamilnadu

“மாமூல் கேட்டு கொலை மிரட்டல்.. அ.தி.மு.க பிரமுகர்கள் 2 பேர் கைது - ஒருவர் தலைமறைவு” : நடந்தது என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க ஆட்சியின்போது தொழிலதிபர்களாக சுற்றித்திரிந்தவர்கள் பிரபல ரவுடி படப்பை குணா மற்றும் அவர்களது கூட்டாளிகள் போந்தூர் சேட்டு, போந்தூர் சிவா.

இவர்கள் மீது திருப்பெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அ.தி.மு.க ஆட்சியின்போது தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி திருப்பெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் இரும்பு கடைகளில் மிரட்டல் விடுத்தும் கட்டப்பஞ்சாயத்து செய்தும் வருமானம் ஈட்டி வந்ததாக கூறப்படுகிறது.

போந்தூர் சேட்டு மனைவி ரவுடி படப்பை குணாவின் மனைவி திருப்பெரும்புதூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க கட்சியின் ஒன்றிய கவுன்சிலர்களாக உள்ள நிலையில், திருப்பெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தொழில் நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருந்த பிரபல ரவுடி படப்பை குணா மற்றும் அவரது கூட்டாளிகள் போந்தூர் சேட்டு அவரது சகோதரர் போந்தூர் சிவா ஆகியோர் திருப்பெரும்புதூர் அருகே மண்ணூர் பகுதியில் உள்ள கடை உரிமையாளரை மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் மூவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில் தலைமறைவாகிவிட்டனர்.

இவர்களில் தலைமறைவாக இருந்த போந்தூர் சிவா என்பவரை திருப்பெரும்புதூர் காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடி தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி படப்பை குணா போந்தூர் சேட்டு ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொழிற்சாலைகளுக்கு மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி படப்பை குணா மற்றும் அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரி வெள்ளைதுரை அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், படப்பை குணாவின் கூட்டாளி போந்தூர் சிவா கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.