Tamilnadu

காரில் தப்பிச் செல்ல முயன்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. கைது செய்தது தனிப்படை போலிஸ்!

அ.தி.மு.க ஆட்சியின்போது ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பணமோசடி தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை கடந்த 17ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.

முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.பி.மனோகர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைத்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் போலிஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், சுமார் 20 நாட்களாக தனிப்படை போலிஸார் தேடி வந்த நிலையில், கர்நாடகாவில் பதுங்கி இருந்த ராஜேந்திர பாலாஜியை போலிஸார் இன்று சுற்றி வளைத்தனர். போலிஸ் வாகனத்தை கண்டு காரில் தப்பியோட முயன்ற ராஜேந்திர பாலாஜியை போலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை ஹசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு தமிழ்நாடு அழைத்து வர தனிப்படை போலிஸார்நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Also Read: பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 3 புகார்.. விடாமல் துரத்தும் அடுத்தடுத்து வழக்கு !