Tamilnadu

Friendshipதான் சொத்து நமக்கு... நண்பன் இறந்த அதே தேதியில் தூக்கில் தொங்கிய வாலிபர்; திருவள்ளூரில் சோகம்!

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் திருப்பாச்சூர் கோட்டையைச் சேர்ந்தவர் பாசூரான். இவருக்கு 2 பெண் மற்றும் மில்டன் என்கிற அப்பு என்ற மகனும் உள்ளனர். பாசூரான் கூலி வேலை செய்து தனது மகள்கள் மற்றும் மகனை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்து வருகிறார்.

ஆவடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் மில்டன் முதலாம் ஆண்டு இளங்கலை பயின்று வந்துள்ளார். அதே கல்லூரியில் பயின்ற அரக்கோணம் புளியமங்கலம் பகுதியைச் சேர்ந்த உதயகுமாரும் மில்டனும் உற்ற நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி உதயகுமார் உயிரிழந்ததையடுத்து சோகத்தில் இருந்த மில்டன் நண்பன் இழப்பை தாங்க முடியவில்லை எனவும் தானும் இறந்து விடுவதாகவும் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதனால் மில்டனின் பெற்றோர் அவரை நாள்தோறும் மிகுந்த கண்காணிப்புடன் கவனித்து வந்துள்ளனர்.

Also Read: இறந்த பின்னும் சிறுமியை சிதைத்த காமூகர்கள்; ராஜஸ்தானில் கொடூரம்; உடற்கூராய்வு அறிக்கையால் ஷாக்!

மேலும் நண்பன் உதயகுமார் இறந்த தேதியான 5ஆம் தேதியே தானும் உயிர் விட வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக வாங்கி வைத்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மில்டனுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். இதனால் இனிமேல் இதுபோல தற்கொலை முயற்சியில் ஈடுபட மாட்டேன் என்று கூறியதால் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்.

இப்படி இருக்கையில், இன்று (ஜன.,05) அதிகாலை சுமார் 3 மணியளவில் மில்டன் தூக்கில் தொங்கியபடி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதால் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

சம்பவம் குறித்து அறிந்த திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய போலிஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பன் இழப்பை தாங்க முடியாமல் நண்பனுக்காக தானும் அதே தேதியில் உயிர் விட வேண்டும் என்ற எண்ணத்தில் மில்டன் ஜனவரி 5ம் தேதியான இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: சிறுமியைக் கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்.. உரிமையாளரை எச்சரித்த போலிஸ் : நடந்தது என்ன?