Tamilnadu

தங்கும் விடுதியில் இளம்பெண், இளைஞர் விஷமருந்தி தற்கொலை... விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில், உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சபரீசன் என்பவரும் நிஷா நந்தினி என்ற பெண்ணும் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

இருவருக்கும் நேற்று காலை விடுதி ஊழியர்கள் உணவு வாங்கி கொடுத்த நிலையில், மதிய உணவை தாங்களே வந்து வாங்கி கொள்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றுள்ளனர்.

பின்னர் நீண்டநேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அறைக்கதவை தட்டி உள்ளனர். அப்போது, அறைக்கதவு திறக்காததால் அதனை உடைத்துச் சென்று உள்ளே பார்த்துள்ளனர்.

அப்போது, சபரீசன் மற்றும் நிஷா நந்தினி ஆகியோர் மூக்கில் நுரை தள்ளிய நிலையில் படுக்கையில் சடலமாக கிடந்தனர். அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள், துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட நிஷா நந்தினி தாம்பரம் கடம்பேரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் ஏற்கனவே திருமணம் ஆனதும், தாம்பரம் காவல் நிலையத்தில் அவரை காணவில்லை எனக் கூறி அவரது கணவர் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் புகார் அளித்ததும் தெரியவந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் ஏம்பலத்தைச் சேர்ந்த சபரீசனும், நிஷா நந்தினியும் காதலர்களாக இருக்கலாம் என்றும், குடும்பத்தினர் எதிர்ப்பு காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலிஸார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: நண்பருடன் சேர்ந்து கொலை செய்த கல்லூரி மாணவி.. சென்னை அருகே அதிர்ச்சி - நடந்தது என்ன?