Tamilnadu

மார்கழி பனி காலத்தில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை.. என்ன காரணம் - வானிலை ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

சென்னையில் நேற்று திடீரென தொடர்ச்சியாக 10 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் மழை நீரில் மூழ்கின. தொடர் கனமழையின் காரணமாகப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் வேலை முடிந்து வீட்டிற்குச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். அதேபோல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்குள்ளாகினர். மேலும் பேருந்துகள் போக்குவரத்தில் சிக்கிக்கொண்டால், பொதுமக்கள் பலர் நீண்ட தூரம் நடந்தே வீட்டிற்கு சென்றனர்.

கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து மாநகராட்சி நிர்வாகமும், போலிஸாரும் துரிதமான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாகப் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. மேலும் தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீரை மோட்டார் பம்புகளை கொண்டு அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் இரவே துவங்கியது.

இந்நிலையில் நிலப்பரப்புக்குள் மேலடுக்கு சுழற்றி வந்ததால் தான் சென்னையில் நேற்று பெய்த அதிகனமழைக்கு காரணம் என வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "புதுச்சேரி, விழுப்புரம், காரைக்கால், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில்தான் இன்று கனமழை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பே மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், சென்னையில் நேற்று பெய்த அதிகனமழையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மேலும் இந்த கனமழையைக் கணிக்கமுடியவில்லை. இந்தப் பகுதியில்தான் கனமழை பெய்யும் என்பதைக் கணிப்பதில் இன்னும் நமக்குச் சிரமம் இருந்து வருகிறது.

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யக்கூடும். ஆனால் சென்னையில் நேற்று பெய்த திடீரென கனமழை போல் அதிக கனமழை இருக்காது. மிதமான மழைபெய்யக் கூடும்" என தெரிவித்துள்ளார்.

அதேபோல் வானிலை படிவங்கள்தான் திடீர் அதி கனமழைக்கு காரணம் என தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் காலநிலை மாற்றமே இப்படியான திடீர் கனமழைக்குக் காரணமாக இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

Also Read: சென்னையில் வரலாறு காணாத பலத்த மழை : நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் !