Tamilnadu

“2021 அரசியலில் தமிழர்களுக்கு வசந்தத்தின் வெளிச்சம் பிரகாசித்த ஆண்டாகும்” : வைகோ புத்தாண்டு வாழ்த்து!

கொரோனா, ஒமைக்ரான் உள்ளிட்ட நோய்களின் பிடியிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட்டு, ஆரோக்கியம் பெறவும் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றி பெறட்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததோடு, தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று டாக்டர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்ட முள்ளை அகற்றி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற புதிய விடியலை தமிழக முதல்வர் பிரகடனம் செய்தது நூற்றாண்டு கால திராவிட இயக்கத்திற்கு ஒளி சேர்ப்பதாகும்.

ஆனால், இலங்கைத் தீவை வளைத்து, தன்னுடைய ஆதிக்கத்திற்குக் கீழே கொண்டுவந்து அநீதி விளைவிப்பதற்கு சீன அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்பட்டு சிங்களச் சிறைகளில் அடைக்கப்படுவதும் தொடர்கதையாகி விட்டது. இதைத் தடுப்பதற்கு மோடி அரசு சிறு துரும்பைக்கூட தூக்கிப்போடவில்லை.

ஈழத் தமிழர் இனப்படுகொலை நடத்தப்பட்டதன் தொடர்ச்சி இன்னும் நின்றபாடு இல்லை. சிங்களவரின் அடிமை நுகத்தடியிலிருந்து தமிழர்கள் விடுபடவும், சுதந்திரமான தமிழ் ஈழம் அமையவும், சிங்களவர் நடத்திய இனக்கொலைக்கு உரிய பன்னாட்டு விசாரணை நடைபெறவும், தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவும் வேண்டிய நடவடிக்கைகளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் 2022 உதயத்தில் சூளுரைப்போம்.

கொரோனா, ஒமைக்ரான் உள்ளிட்ட நோய்களின் பிடியிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட்டு, ஆரோக்கியம் பெறவும் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றி பெறட்டும். சாதி, சமய மோதல்கள் இல்லாத சமத்துவமும், சகோதரத்துவமும், சமூகநீதியும் தமிழகத்தில் முழுமையாக நிலைநிறுத்தப்படட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “இனி வரும் காலங்களும் கழகத்தின் புத்தாண்டுகளாகவே இருக்கும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து!