Tamilnadu

துப்பாக்கியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது.. போலிஸிடம் சிக்கியது எப்படி - பகீர் சம்பவம்!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நெய்யூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தாசன் மகன் ஜெபராஜ் (39). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார்.

இதனால் பதறிப்போன அவர் சத்தம் எழுப்பவே அருகில் இருந்தவர்கள் வந்துள்ளனர். அவர்களையும் துப்பாக்கியை காட்டி மிரட்டிய மர்ம நபர் ஜெபராஜ் பாக்கெடில் இருந்த 1500 ரூபாயை பறித்துச் சென்று விட்டார். இதுகுறித்து ஜெபராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த போலிஸார் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்த மர்ம நபரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் மதுரை என்ற சேர்மராஜ் (26) என்பதும் இவர் மீது 2 கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. சமீபத்தில் அங்கிருந்து இங்கு வந்து குடும்பத்துடன் நெய்யூரில் வாடகை வீட்டில் வசித்து வருவதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலிஸார் அவரிடம் இருந்த துப்பாக்கி, ஐந்து தோட்டாக்கள் மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்த போலிஸார், சேர்மராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: “ராஜேந்திரபாலாஜியை ஒப்படைக்க வேண்டிய முதல் கடமை அ.தி.மு.க தலைமைக்குத்தான் உண்டு” : முரசொலி சாடல்!