Tamilnadu
நிலுவை தொகையை பைசல் செய்ய ’வானம்’ பட பாணியில் வழிப்பறி : முன்னாள் ஊழியர் சிக்கியது எப்படி?
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் ஸ்டீல் கம்பெனியில் பணியாற்றுபவர் தினேஷ் (27). கடந்த 25ஆம் தேதி உத்திரமேரூர் வந்தவாசி ஆகிய ஊர்களில் உள்ள கடைகளில் வசூலித்த பணம் 5 லட்சம் ரூபாயுடன் பேருந்தில் வந்து மதுரவாயல் சர்வீஸ் சாலை அருகே கடந்த 26ஆம் தேதி அதிகாலை வந்து இறங்கினார்.
பின்னர் தனது நண்பர் விக்னேஷ் குமாரை செல்போனில் தொடர்புகொண்ட தினேஷ் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்து வருமாறு கூறினார். விக்னேஷ் வந்ததும் இருவரும் பைக்கில் புறப்பட்டனர்.
பின்னர் விக்னேஷ் குமாரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு விட்டு, வானகரத்தில் உள்ள ஸ்டீல் கம்பெனியை நோக்கி தினேஷ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் முகவரி கேட்பது போல் நடித்து தினேஷிடம் இருந்த பணப்பையை பறித்து சென்றனர்.
இது தொடர்பாக மதுரவாயல் போலீசார் நடத்திய விசாரணையில் அதே ஸ்டீல் கம்பெனியில் பணியாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியை விட்டு நின்ற சுப்பிரமணியனின் கைவரிசை என தெரியவந்தது.
அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் ஸ்டீல் கம்பெனியில் பணியை விட்டு நின்றபின் போரூரில் சுப்ரமணியன் மின்சாதன பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்துள்ளார்.
ஏற்கெனவே பணியாற்றிய ஸ்டீல் நிறுவனத்தில் இருந்து கடந்த 25ஆம் தேதி அழைத்துள்ளனர். நீ வசூலித்து கொடுக்க வேண்டிய மூன்று லட்சம் ரூபாய் இன்னும் பாக்கி உள்ளது. அதை வாங்கி கொடுக்காமல் வேலையை விட்டு நின்று விட்டாய்.
டிசம்பர் இறுதிக்குள் மூன்று லட்சம் ரூபாயை தரவில்லை என்றால் சொந்த பணத்தை தர வேண்டுமென கட்டாயப்படுத்தி எழுதி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுப்பிரமணியன் கேரளாவைச் சேர்ந்த தனது நண்பர் சதீஷ் என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஸ்டீல் கம்பெனி கலெக்சன் ஊழியர்கள் வரும்போது வழிமறித்து கொள்ளையடித்து அந்த பணத்தை கட்டிவிடலாம் என திட்டம் தீட்டியுள்ளனர். இதையடுத்து கடந்த 26ஆம் தேதி அதிகாலை பணம் வசூலித்து கொண்டுவரும் ஸ்டீல் கம்பெனி ஊழியர்களுக்காக சதீஷ் அவரது நண்பர் முத்தையா தினேஷ் என்பவரும் காத்திருந்துள்ளனர்.
சுப்ரமணியன் சம்பவ இடத்துக்கு வரவில்லை. கலெக்சன் ஊழியர் தினேஷ் வந்து இறங்கியதும், அவரை நோட்டமிட்டு பின் தொடர்ந்து கவனத்தை திசை திருப்பி பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது.
சதீஷையும், அவரது நண்பர் ஜிம் பயிற்சியாளர் பழவந்தாங்கல் முத்தையா தினேஷையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!