Tamilnadu

நண்பருடன் சேர்ந்து கொலை செய்த கல்லூரி மாணவி.. சென்னை அருகே அதிர்ச்சி - நடந்தது என்ன?

தொடர்ந்து தொல்லை தொடர்ந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து மாணவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேளம்பாக்கம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.

இந்த மாணவி முன்பு வேறொரு தனியார் கல்லூரியில் படித்து வந்தபோது அதே கல்லூரியில் பணிபுரியும் செந்தில் (44) என்பவர் இவருக்கு பழக்கமாகியுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் திருமணமானவர். குழந்தை இல்லை.

கல்லூரி மாணவியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்ட செந்தில், பாலியல் தொல்லை கொடுத்ததோடு தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்காத கல்லூரி மாணவி தனது நண்பர் அருண்பாண்டியனுடன் சேர்ந்து செல்போன் மூலமாக பேசி செந்திலை கேளம்பாக்கம் அருகே வரவழைத்துள்ளார்.

செந்தில் தனியாக வந்த நிலையில், அவரை கழுத்தில் அறுத்து, நெஞ்சில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, கல்லூரி மாணவியையும், அவருடைய நண்பர் அருண்பாண்டியனையும் பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் சடலத்தைக் கைப்பற்றி கொலை செய்த மாணவி மற்றும் அவரது நண்பரை கைது செய்துள்ளனர். செந்திலின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொல்லை கொடுத்தவரை கத்தியால் குத்தி கொலை செய்த கல்லூரி மாணவியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மகளின் காதலனை கொலை செய்துவிட்டு திருடன் என நாடகமாடிய தந்தை... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!