Tamilnadu

’சபரிமலைவரை என் கன்ட்ரோல்தான்’ -பக்கா ப்ளான் போட்டு குடும்பத்தையே ஏமாற்றிய பலே கில்லாடி சிக்கியது எப்படி?

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் ஏங்கல்ஸ். தான் ஒரு வனத்துறை அதிகாரி எனக் கூறி உத்தமபாளையத்தைச் சேர்ந்த கர்ணன் என்பவரின் மகள் ஹர்சிலாவை 3 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்துள்ளார்.

இவர்களது திருமணத்துக்காக பெண் வீட்டார் 65 சவரன் நகை, 10 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகள் கொடுத்திருக்கிறார்கள். ஹர்சிலாவுக்கும், ஏங்கல்ஸ்கும் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. திருமணம் ஆனதில் இருந்தே வேலைக்குச் செல்வதாகச் சொல்லி தினமும் வீட்டை விட்டு வெளியே சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ஏங்கல்ஸ்.

இந்நிலையில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் எனச் சொல்லி ஹர்சிலாவிடமும், அவரது தந்தை கர்ணனிடமும் பணம் கேட்டிருக்கிறாராம். இதனால் சந்தேகமடந்த பெண்ணின் தந்தை, வனத்துறை அலுவலகத்தில் சென்று விசாரித்த போதுதான் ஏங்கல்ஸ் மோசடி பேர்வழி என தெரியவந்திருக்கிறது.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான பெண் வீட்டார் உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏங்கல்ஸ் குறித்து புகாரளித்திருக்கிறார்கள். புகாரின் பேரில் போலி வனத்துறை அதிகாரியாக வலம் வந்த ஏங்கல்ஸை கைது செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

அதில், பெண் வீட்டாரை நம்ப வைப்பதற்காக திருமண பேச்சுவார்த்தை நடக்கும் போது திண்டுக்கல் முதல் சபரிமலை வரை உள்ள வனப்பகுதி தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றும், போலி போட்டோக்களை காண்பித்ததும் தெரிய வந்தது.

திருமணத்திற்கு பின்னர் ஹர்சிலாவிடமும் அவரது வீட்டாரிடமும் கூடுதலாக நகையும் பணமும் கேட்டு வறுபுறுத்தி வந்ததும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பேரிலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏங்கல்ஸின் இந்த மோசடித்தனத்துக்கு உதவிக்கரமாக இருந்த அவரது உறவினர்களையும் போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்த கும்பல்.. 2 பேரை கைது செய்த போலிஸ்: நடந்தது என்ன?